இவ்வாண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 10 மாணவர்கள் 200 புள்ளிகளை பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் G.L பீரிஸ் அவர்கள் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மிக குறுகிய காலத்தில் வெளியிட முடிந்தமை பல ஆசிரியர்களின் அர்ப்பணிப்பினாலே என்று அவர் குறிப்பிட்டார்.
இம்முறை 10 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகளை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் அவர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இது எம் நாட்டிற்கும் மனித மூலதனத்திற்கும் பெறுமதி சேர்ப்பதாக அவர் கூறியிருந்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில் அவரின் அடுத்த பணி 2020 உயர்தர பரீட்சை பெறுபேறுகளை கூடிய விரைவில் வெளியிடுவது என்றும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டார். உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி பல்கலைக்கழகம் செல்ல ஒன்றரை வருடங்கள் காத்திருக்க வேண்டியிருப்பதால், இக்கால எல்லையை குறைத்து இச்செயன்முறைகள் விரைவுபடுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
நவம்பர் 23 ஆம் திகதி பாடசாலைகளை மீள திறக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அதற்கு முன்னர் பாடசாலைகளினதும் மாணவர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்களையும் எடுப்பதாக அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார். எவ்வாறெனிலும் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளதாக தெரிவித்தார்.
திட்டமிட்டபடி ஜனவரி மாதம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடாத்த முடியுமென அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்